புதுடெல்லி: ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படத்தின் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்காக (போஸ்ட் புரொடக்சன்) ஆட் பீரோ அட்வர்டைஸிங் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு ரூ.10 கோடி கடன் வழங்க சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா அனுமதி அளித்தது. கடன் தொகையை அந்த நிறுவனம் செலுத்த தவறியது. இதையடுத்து கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் வங்கி வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் பிறகு 3.56 கோடி ரூபாயை செலுத்தியதன் மூலம் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டது.
கடன் தொகையை செலுத்திய போதும் வியாபார ரீதியாக இழப்பு ஏற்பட்டது என்று கூறி ஆட் பீரோ அட்வர்டைஸிங் நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம் ரூ.75 லட்சம் இழப்பீடு மற்றும் கடன் கணக்கு நிலுவை தொகை இல்லாமல் தீர்க்கப்பட்டதாக சான்றிதழை வழங்க சென்ட்ரல் பாங்கிற்கு உத்தரவிட்டது. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா,பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் இதை விசாரித்து,‘‘லாபம் ஈட்டும் நோக்கங்களுக்காக கடன் வாங்கினால் நுகர்வோர்கள் இல்லை.
வணிக நிறுவனங்கள் நுகர்வோர் என்பதிலிருந்து தானாகவே விலக்கப்படவில்லை என்றாலும், கடனின் நோக்கம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. நிறுவனம் வாங்கிய கடன் நேரடியாக லாபம் ஈட்டும் நடவடிக்கையுடன் இணைக்கப்பட்டதால், அது நுகர்வோர் சட்டத்தின் பாதுகாப்பைக் கோர முடியாது’’ என்று தீர்ப்பளித்தனர்.
The post லாப நோக்கத்திற்காக கடன் வாங்குபவர் நுகர்வோர் இல்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.