புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் நீடித்து வருகிறது. பலியானோர் எண்ணிக்கை 50க்கும் மேல் உயர்ந்து விட்டது. அசாம், அருணாச்சல், மணிப்பூர், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறார்கள். மொத்தம் 50 பேர் பலியாகி விட்டனர். அசாம் மாநிலத்தில் 19, அருணாச்சலில் 12, மேகாலயா 6, மிசோரம் 6, சிக்கிம் 3, திரிபுரா 2, நாகாலாந்து மாநிலத்தில் 2 பேரும் பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் அதிகபட்சமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
21 மாவட்டங்களில் உள்ள மக்கள் தத்தளித்து வருகிறார்கள். பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. வெள்ளத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. அருணாச்சலிலும் தொடர் மழை காரணமாக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 24 மாவட்டங்களில் 33,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் பலியாகி விட்டனர். சிக்கிம் மாநிலத்தில் மழை குறைந்து விட்டது. இதையடுத்து சுற்றுலாத்தலமான லாச்சுங்கில் கிட்டத்தட்ட ஒருவாரமாக சிக்கி இருந்த 59 சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டர்கள் மூலம் காங்டாக்கிற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி செல்ல சிக்கிம் அரசு சார்பில் பாக்யோங் விமான நிலையத்தில் கூடுதல் ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மழை குறைந்து முக்கிய ஆறுகளில் இருந்து தண்ணீர் வடிந்து வருவதால், இயல்பு நிலை மீண்டு வருகிறது. ஒருவாரம் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்துள்ளது. 35,242 வீடுகள் சேதம் அடைந்தன.
The post வடகிழக்கு மாநிலங்களில் வெள்ள அபாயம் நீடிப்பு: பலி எண்ணிக்கை 50ஐ தாண்டியது appeared first on Dinakaran.