டெல்லி: ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 40 தமிழர்கள் டெல்லி திரும்பினர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை அடுத்து சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலம் திரும்புகின்றனர். விமானம், ரயில் மற்றும் பேருந்துகள் மூலமாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஏற்கனவே 28 பேர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் ஒருவரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த 40 தமிழர்கள் டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 பேரை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 சுற்றுலா பயணிகளும் ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, விமான கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது என அமைச்சர் வேண்டுகோள் விடுத்த பிறகும் கட்டணம் கிடுகிடு உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் விமானக் கட்டணத்தை நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. ஸ்ரீநகர் – டெல்லி இண்டிகோ விமானத்தில் ரூ.11,000 முதல் ரூ.13,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் – டெல்லி ஸ்பெஸ் ஜெட் விமானத்தில் ரூ.11,000 முதல் ரூ.12,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஸ்ரீநகர் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ரூ.21,000 முதல் ரூ.23,000ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் விமான சேவையும் இல்லாததால் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர்.
The post ஸ்ரீநகர் – டெல்லி விமானக் கட்டணம் கிடுகிடு உயர்வு.. காஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலம் திரும்புகின்றனர்!! appeared first on Dinakaran.