சென்னை: அண்மையில் நேபாள நாட்டில் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது அந்நாட்டு அரசு. இதையடுத்து அங்கு ஏற்பட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினரின் போராட்டம் மற்றும் கலவரத்தை அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த சூழலில் ஜென் ஸீ தலைமுறையினர் தங்களது தகவல் பரிமாற்றத்துக்கு பிட்-சாட் (Bitchat) எனும் மெசேஜிங் செயலியை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ப்ளூடூத் வழியே இயங்கும் இந்த செயலி குறித்து விரிவாக பார்ப்போம்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழல், ஆட்சியில் இருப்பவர்களின் படோடாபம் உள்ளிட்ட காரணங்களால் வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்த நேபாள தேசத்தின் இளம் தலைமுறையினர் அண்மையில் போராட்டத்தில் இறங்கினர். அது புரட்சியாக வெடித்து ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது.