புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதிக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தான் நடத்திய பீரங்கி தாக்குதலில், அதிகம் பாதிக்கப்பட்டது ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதி. இதில் 27 பேர் கொல்லப்பட்டனர். 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை பூஞ்ச் மாவட்டம் செல்ல உள்ளதாக செய்திகள் வௌியாகி உள்ளன. இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ராகுல் காந்தி 2ம் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
* டெல்லி பல்கலை., எஸ்சி, எஸ்டி மாணவர்களுடன் ராகுல் உரையாடல்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லி பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு பயிலும் பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது, “கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்” என்ற டாக்டர் அம்பேத்கரின் முழக்கத்தில் உத்வேகம் பெறுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
The post appeared first on Dinakaran.