ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரியிலிருந்து கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 50 சதவீத வரி செலுத்த வேண்டிய நெருக்கடி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரத்துக்கு சவாலான விஷயமாகவே அமைந்துள்ளது.
கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்திய பணம், ரஷ்யா தொடர்ந்து போர் நடத்த உதவுகிறது என்ற அமெரிக்காவின் வாதம் ஏற்புடையதல்ல. பல நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தக உறவு மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை குறிவைத்து அமெரிக்கா வரி விதிப்பது, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நெருக்கடி என்ற வெளித்தோற்றத்தைக் காட்டிலும், உலக அளவில் பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவுக்கு அமெரிக்கா போடும் முட்டுக்கட்டையாகவே பார்க்கப்படுகிறது.