புதுடெல்லி: சோஹோ நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ செயலியை முழு வீச்சில் கொண்டு வர தீவிரமாக இருக்கிறார்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இலவசமானது, பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது. சோஹோவால் தொடங்கப்பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகிராம் போல் பயன்படுத்தலாம். இந்நிலையில், ‘அரட்டை’ செயலியின் குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி ஜான் முதல் முறையாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரட்டை செயலி 10 லட்சம் வாடிக்கையாளர்களை தாண்டி விட்டது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகள் விஷயத்தில் பயனாளிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த எண்ணத்தை நீடித்து நிலைக்க செய்வதற்காக எங்கள் குழு மும்முரமாக பணியாற்றிவருகிறது. குறிப்பாக தனியுரிமை, மதிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.