மகாராஷ்டிரா: மராட்டியத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை அம்மாநில அரசு நிறுத்தி வைத்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் கல்வி ஆண்டு முதல், 1 – 5 வகுப்புகளுக்கு இந்தி மொழி கட்டாயம் என்று கடந்த வாரம் பட்னாவிஸ் அரசு உத்தரவிட்டு இருந்தது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப் படுத்தியுள்ளதால் மராட்டியத்தில் 3வது மொழியாக இந்தி கற்பது கட்டாயமாக்கப்பட்டது. இது மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியை கட்டாயமாக்கியதற்கு மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கடும் எதிர்ப்பை அடுத்து மராத்தி கட்டாயம், இந்தி மொழி கட்டாயமல்ல என்று முதல்வர் பட்னவிஸ் மழுப்பல் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இந்தி கட்டாயமல்ல என பட்னவிஸ் கூறியதுபோல் ஒன்றிய அரசும் கூறுமா என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்தியை கட்டாயமாக்கியதற்கு மராட்டிய அரசால் நியமிக்கப்பட்ட மாநில மொழிக் கொள்கை குழுவும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநில மொழி குழு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து முடிவை நிறுத்தி வைப்பதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியை கட்டாயமாக்கியதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில் மராட்டிய முதல்வர் பட்னவிஸ் உத்தரவை நிறுத்தி வைத்தார்.
The post இந்தி கட்டாயம்.. கடும் எதிர்ப்பை அடுத்து உத்தரவை நிறுத்தி வைத்தார் மராட்டிய முதல்வர் பட்னவிஸ்..!! appeared first on Dinakaran.