லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் ஒரு சிறுமி வசித்து வருகிறார். அவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாளில், தனது வீட்டுக்கு வருமாறு இன்ஸ்டாகிராம் நண்பனுக்கு அந்த சிறுமி அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லை. சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டதும் நண்பன் வந்துவிட்டான் என நினைத்து கதவை திறந்தார். மாணவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
மாணவியின் நண்பனுடன் மேலும் 3 சிறுவர்கள், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 4 பேரும் வீட்டுக்குள் புகுந்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த மாணவியின் தாய் வீடு திரும்பினார். மகள் இருந்த நிலையை பார்த்து தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே மகளை வெளியே இழுத்து வந்தார். பின்னர் அந்த 4 சிறுவர்களையும் அதே அறையில் வைத்து பூட்டிவிட்டு, போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் இந்த விவகாரம் அந்த குடியிருப்பில் உள்ள சிலருக்கும் தெரியவந்தது.
இப்படி ஒரு சம்பவம் நடந்தது வெளியே தெரியவந்தால் குடியிருப்பின் மதிப்பு கெட்டுவிடும் என்று கருதிய அந்த குடியிருப்பின் சங்க நிர்வாகிகள் சிலர், போலீசார் வருவதற்குள், அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 சிறுவர்களையும் வெளியேற்றினர். இருப்பினும் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை, கவிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 பேரில் 3 பேர் மாணவியுடன் படிக்கும் மாணவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
The post இன்ஸ்டாகிராமால் வந்த வினை; உ.பி.யில் வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்த 4 மாணவர்கள்: போலீசில் புகார் appeared first on Dinakaran.