டெல்லி : உருது மொழி வெளி உலக மொழி அல்ல என்றும் இந்த நாட்டில் பிறந்த மொழி என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே உருது மொழியை இந்திய மக்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மராட்டிய மாநிலம் காத்தூர் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள பெயர் பலகையில், உருது மொழியில் எழுத எதிர்ப்பு தெரிவித்து, கவுன்சிலர் ஒருவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உருது மொழி வேற்று கிரக மொழி அல்ல, அது இந்த நாட்டில் பிறந்த மொழி, அதனை பயன்படுத்த எந்த தடையும் விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மொழி மதத்தை குறிப்பது அல்ல ; மொழி ஒரு சமூகத்துக்கு, ஒரு பிராந்தியத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் “நாட்டின் பன்முகத்தன்மை மகத்தானது -அதுவே நமது பலம், பன்முகத்தன்மையை மதித்து மகிழ வேண்டும். இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. கடந்த 2021ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 22 பட்டியல் மொழிகள் உள்பட 234 தாய் மொழிகள் உள்ளன. உருது மொழி இந்தியாவில் அதிகம் பேசப்படும் 6வது மொழி, “என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
The post “உருது மொழி வெளி உலக மொழி அல்ல” : உருது மொழியை இந்திய மக்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது :உச்சநீதிமன்றம் தீர்ப்பு!! appeared first on Dinakaran.