டெல்லி: நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என்று பிசிசிஐக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; “தொற்று அல்லாத நோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகரித்தே காணப்படுகின்றன. புற்றுநோய், நுரையீரல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 70 சதவீத உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. புகையிலை பொருட்களும், மதுவும் தொற்றில்லா நோய்களை உருவாக்கும் முக்கிய காரணிகளாகும்.
உலகளவில் புகையிலைப் பொருட்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 14 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஐபிஎல் போட்டியின்போது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த வகையிலும் மது, புகையிலைப்பொருட்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடக்கூடாது.
ஐபிஎல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும், நடக்கும் வளாகங்களிலும் மது, புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. மது, புகையிலைப்பொருட்களுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என்று விளையாட்டு வீரர்கள், வர்ணனை செய்வோருக்கு அறிவுறுத்த வேண்டும். ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையில் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக கிரிக்கெட் வீரர்கள் இருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஐபிஎல் போட்டியின் போது புகையிலை தொடர்பான விளம்பரங்களை வெளியிடக் கூடாது: பிசிசிஐக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் appeared first on Dinakaran.