புதுடெல்லி: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு விதிகள் குறித்து நேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ராகுல் காந்தி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் தங்களின் காலாவதியான அரசியல் கட்டுக்கதைகளை தக்கவைக்க, முற்போக்கான கல்வி சீர்த்திருத்தங்களை கற்பனையான அச்சுறுத்தலாக மாற்றப் பார்ப்பது துரதிஷ்டவசமானது, கவலைக்குரியது. இந்த விதிகள் கல்வியின் எல்லைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டதே தவிர அதை சுருக்குவதை அல்ல. அதிக குரல்களை உள்ளடக்க முயற்சிக்கிறதே தவிர மவுனமாக்குவதில்லை. எதையும் எதிர்ப்பது என்பது அரசியலாக பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் நல்ல அரசியல் கிடையாது. அற்பத்தனமான அரசியல். அரசியலமைப்பின் ஆதரவாளர்கள் என தங்களை கூறிக் கொள்ளும் தலைவர்கள், யுஜசி வரைவு விதிகளை எதிர்ப்புதற்கு முன் சிறிது நேரம் ஒதுக்கி அதை படித்து பார்க்க வேண்டும் என்றார்.
* கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு
இதற்கிடையே யுஜிசி வரைவு விதிகள் குறித்து பொது மக்கள் கடந்த 5ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்கிற இறுதிக்கெடு இந்த மாதம் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக யுஜிசி செயலாளர் மணிஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
The post கல்வி நிறுவனங்களை யுஜிசி வரைவு விதிகள் பலவீனப்படுத்தவில்லை: ஒன்றிய அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.