திருவனந்தபுரம்: காதலிப்பது போல நடித்து பள்ளி, கல்லூரி மாணவிகளை ஏமாற்றி ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து பின்னர் அவர்களை வைத்து விபச்சார விடுதி நடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொச்சி எடப்பள்ளியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக எளமக்கரை போலீசுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து போலீசார் அங்கு நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் பாலக்காடு மாவட்டம் மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்த அக்பர் அலி மட்டுமே இருந்தார். இதையடுத்து யாராவது பொய்யான தகவல் தந்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.
ஆனால் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அக்பர் அலி தான் எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் விபசார விடுதி நடத்தி வருவதும் தெரியவந்தது. உடனே அக்பர் அலியை போலீசார் கைது செய்து, அவர் நடத்தி வரும் விபசார விடுதிக்கு கொண்டு சென்றனர். அதைத்தொடர்ந்து அங்கு நடத்திய சோதனையில் கேரளா, வடமாநிலங்களைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் உள்பட 10 பேர் பிடிபட்டனர். இளம்பெண்கள் 6 பேரும் அக்பர் அலியின் காதல் வலையில் சிக்கி விபச்சார விடுதியில் தள்ளப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பள்ளி, கல்லூரி மாணவிகள் ஆவர்.
இவர்களை காதல் வலையில் சிக்க வைத்த அலி, பின்னர் ஓட்டலுக்கு அழைத்து சென்று ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்வார். அதன் பிறகு மிரட்டி, தான் நடத்தி வரும் விபசார விடுதியில் அவர்களை தள்ளி விடுவார். இவரது விபசார விடுதிக்கு கொச்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்பர் அலியிடம் ஏராளமான இளம்பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர் மீது போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post காதல் வலையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய வாலிபர்: கேரளாவில் பரபரப்பு appeared first on Dinakaran.