டெல்லி: இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தாக்கல் வெளியாகிய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதோடு மேலும் பல சலுகைகளையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் 2 லட்சம் மின்சார வாகன விற்பனையை தாண்டியதை கொண்டாடும் வகையில் 45 நாட்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி, 0 டௌன் பேமென்ட் வசதியை பயன்படுத்தி முழு தொகையையும் கடனாக பெற்று டாடா மின்சார கார் வாங்குதல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும் நெக்சான் ஈவீ அல்லது கேர்வ் ஈவீ வாங்குபவர்கள் டாடா பவரிங் சார்ஜ்ஜிங் நெட்ஒர்க்கான 6 மாத இலவச காம்ப்ளி மென்டரி அக்ஸசை பெற முடியும் அதே போல 7.2 கிலோ வாட் ஏசி கொண்ட வீட்டில் சார்ஜ் செய்யும் கருவிகள் இலவசமாக பொருத்தி தரப்படும்.
ஏற்கனவே உள்ள டாடா வாடிக்கையாளர்கள் மேலும் சில வெகுமதிகளையும் பெற முடியும் நெக்சான் ஈவீ அல்லது கேர்வ் ஈவீக்கு மாற நினைக்கும் டாடா ஈவீ உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும். அதே நேரத்தில் மின்சார வாகனத்திற்கு மாற நினைக்கும் டாடா ஐசியி வாகன உரிமையாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை போனஸ் கிடைக்கும். டாடா மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் டியாகோ ஈவீ, டைகர் ஈவீ, பஞ்ச் ஈவீ உள்ளிட்ட 5 மின்சார மாடல்களை வழங்கி வருகிறது. இதன் விலை 7.99 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. 2024 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.61 ஆயிரத்து 496 மின்சார வாகன யூனிட்டுகளை விற்பனை செய்தது. 2023ல் 60 ஆயிரத்து 100 ஆக கார் விற்பனை இருந்தது. இருப்பினும் அதன் சந்தை பங்கு 2023ல் 73 சதவீதத்திலிருந்து 2024ல் 67 சதவீதமாக குறைந்தது. 2025ல் ஹரியர் ஈவீ மற்றும் சியாரா ஈவீ உள்ளிட்ட அடுத்து வரவிருக்கும் மாடல்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
தற்போது டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெர்லின் ஆலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் டெஸ்லா தோராயமாக 21 லட்சம் விலையில் மலிவான ஈவீ மாடல்களை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்தியாவில் விற்பனையை தொடங்குவதற்கான சாத்தியமான இடங்களாக மும்பை மற்றும் டெல்லியை தேர்வு செய்துள்ள டெஸ்லா இது குறித்தான அதிகார பூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு இடையில் டாடாவின் சலுகைகள் மின்சார வாகன விற்பனையில் போட்டி தொடங்கி உள்ளதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.
The post கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி.. Tesla-க்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு? appeared first on Dinakaran.