திருவனந்தபுரம்: மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான பொதுநல வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் முதல் இந்த தடை அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
கேரள மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என தெரிவித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தண்ணீர் குடிப்பதற்கு ஸ்டீல், காப்பர் டம்பளர்களை பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி தேக்கடி, வாகமண், அதிரப்பள்ளி, சாலக்குடி, நெல்லியம்பதி, பூக்கோடு ஏரி-வைத்திரி, வயநாட்டில் உள்ள கர்லாட் ஏரி, அம்பலவயல், வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் ஆகிய சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலா தளங்கள் தவிர கேரளா முழுவதும் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், ஓட்டல்கள் மற்றும் உணவகங்களிலும், அனைத்து அதிகாரப்பூர்வ ஒன்றிய மற்றும் மாநில அரசு விழாக்களிலும் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.