டெல்லி: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கவுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து கொளுத்தப்பட்டதில் 59 பேர் பலியானார்கள். இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் 31 பேரின் தண்டனையை உறுதி செய்த குஜராத் உயர்நீதிமன்றம், 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
இந்த வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து குஜராத் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனிடையே, ரயில் எரிப்பு வழக்கில் தங்களின் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து குற்றவாளிகள் பலர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, ராஜேஷ் பிண்டல் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தண்டனை விவரங்களை குற்றவாளி வாரியாக குறிப்பிட்டும், தற்போது அவா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ள வாதத்துக்கான ஆதார விவரங்களையும் குறிப்பிட்டு வரும் மே 3ம் தேதிக்குள் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு குற்றவாளிகள் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதிகள் தெரிவித்தனா்.
அதுபோல, மாநில அரசு தரப்பிலும் இதுபோன்ற விவரங்களுடன் திருத்தப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினா். மேலும், இந்த வழக்கில் இரண்டு வார காலத்துக்கு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, முதல்கட்டமாக வரும் மே 6, 7ம் தேதிகளில் நாள் முழுவதும் இந்த வழக்கு மட்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த நாள்களில் வேறு எந்த வழக்குகளும் இந்த அமா்வில் விசாரிக்கப்படாது என்று நீதிபதி மகேஸ்வரி தனது உத்தரவில் தெரிவித்தாா்.
The post கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு.. குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு மீது மே 6,7ம் தேதிகளில் உச்சநீதிமன்றம் இறுதி விசாரணை!! appeared first on Dinakaran.