புதுடெல்லி: தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு விசாரணை கோப்புகள் திருடப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புனாய்வு அமைக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் யானை ராஜேந்திரன் இந்த விவகாரத்தில் இரண்டாவதாக ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘‘சிலை திருட்டு வழக்கு சம்பந்தப்பட்ட கோப்புகள் காணாமல் போன விவகாரத்தில், இரண்டாவது எப்.ஐ.ஆர் பதியப்பட்டு உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மனுதாரர் கூறியது போன்று 41 எப்.ஐ.ஆர்கள் காணாமல் போகவில்லை.
11 எப்.ஐ.ஆர் மட்டுமே காணாமல் போயிருக்கிறது. அவற்றில் இருக்கும் விஷயங்களையும் மீண்டும் தயார் செய்து விட்டோம். மேலும் இந்த சிலை கடத்தல் பிரிவில் இருந்த காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம் பெற்று சென்றுள்ளனர். இதில் இதுவரை யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவித்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சிலை கடத்தல் கோப்புகள் மாயமான விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 11 வழக்கையும் ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.
அவரை இன்றிலிருந்து(நேற்று) ஒருவார காலத்துக்குள் மாநில அரசு நியமனம் செய்ய வேண்டும். அவர் வழக்கு தொடர்பான விசாரணையை விரிவாக மேற்கொண்டு மார்ச் இறுதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றமும் கண்காணித்து வரும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
The post சிலை கடத்தல் எப்.ஐ.ஆர் காணாமல் போன விவகாரம் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.