சண்டிகர்: அரியானாவில் சூட்கேசில் சடலமாக வீசப்பட்ட காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலையில் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலம் ரோதக்கின் விஜய் நகரில் வசித்தவர் ஹிமானி நர்வால் (22). இவர் அரியானா காங்கிரஸ் கட்சியின் கிராமப்புற மாவட்ட துணைத் தலைவர். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர். இளம் வயதிலேயே கட்சியில் முக்கிய பொறுப்புகளை கவனித்து வந்தவர். இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். ஹிமானியின் சடலம் சாம்ப்லா பேருந்து நிலையம் அருகே சூட்கேசில் வைத்து வீசப்பட்டிருந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் செல்போன் பழுதுபார்க்கும் கடை நடத்தி வந்த சச்சின் (30) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் டெல்லியில் வைத்து கைது செய்தனர். இவர், ஹிமானியை செல்போன் சார்ஜர் ஒயரால் கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அப்புறப்படுத்தியதை ஒப்புக் கொண்டார். ஹிமானியுடன் சச்சினுக்கு பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சச்சினுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், ஹிமானியுடன் நெருங்கிப் பழகி உள்ளார்.
ஹிமானியின் தாய், சகோதரர் சொந்த ஊரில் வசித்த நிலையில், ஹிமானி மட்டும் தனது படிப்புக்காக விஜய் நகரில் பூர்வீக வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனால் சச்சின் அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். கடந்த 27ம் தேதி சச்சின் வீட்டிற்கு வந்த போது ஹிமானியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சார்ஜர் வயரால் ஹிமானியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது நகை, லேப்டாப் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஹிமானியின் மொபட்டிலேயே தனது கடைக்கு சென்று வைத்துள்ளார். மீண்டும் வீட்டிற்கு வந்து சூட்கேசில் சடலத்தை மறைத்து ஆட்டோவில் ஏறி சாம்ப்லா பஸ் நிலையம் அருகே சென்று அங்கு சூட்கேசை வீசி உள்ளார். ஹிமானி தன்னிடம் அதிக பணம் வாங்கியதாகவும் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்ததாக சச்சின் கூறி உள்ளார். இது நம்பும்படியாக இல்லை என்பதால், அவரிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
The post சூட்கேசில் சடலமாக வீசப்பட்ட அரியானா காங். பெண் நிர்வாகி கொலையில் ஆண் நண்பர் கைது: பரபரப்பு தகவல்கள் அம்பலம் appeared first on Dinakaran.