ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து பலமு டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் கூறுகையில்,
மாவோயிஸ்ட் மணீஷ் யாதவ் தனது படையினருடன் காட்டில் காணப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, குழு அமைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அப்போது பாதுகாப்புப் படையினரைக் கண்டவுடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் மணீஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
முன்னதாக என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மற்றொரு தேடப்படும் மாவோயிஸ்ட் குந்தர் கெர்வார் என்கவுன்டர் இடத்தில் கைது செய்யப்பட்டார் என அவர் கூறினார்.
லதேஹரில் உள்ள மஹுவாதனர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரம்காட் மற்றும் டவுனா காடுகளில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். என்கவுன்டருக்குப் பிந்தைய தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் மீட்கப்பட்டு பின்னர் மணீஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்டது. காடுகளில் மறைந்திருப்பதாக நம்பப்படும் மற்ற மாவோயிஸ்ட்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. மனிஷ் யாதவ் அழிக்கப்பட்டதன் மூலம், புதா பஹாட் பயிற்சி மையத்தில் பிகாரைச் சேர்ந்த மாவோயிஸ்ட் பிரிவுகளின் தலைமைத்துவம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொலை appeared first on Dinakaran.