பணி நிரந்தரம் கேட்டும் சம்பளக் குறைப்பை எதிர்த்தும் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தப் போராட்டம் நள்ளிரவுக் கைது நடவடிக்கை மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் மாற்றாந்தாய்போல நடந்துகொண்ட தமிழக அரசின் அணுகுமுறை அனைத்துத் தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 11 மண்டலங்களுக்கான திடக்கழிவு மேலாண்மை சார்ந்த பணிகள் கடந்த அதிமுக காலத்திலேயே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 4 மண்டலங்களில் இப்பணிகளை நிரந்தரப் பணியாளர்களும் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர்களும் செய்துவருகின்றனர்.