டெல்லி: டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனை படைத்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கத்தார் நாட்டின் தோகாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை. இந்நிலையில், இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார். இதன் மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25வது வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றார் .
போட்டியில் முதலிடத்தை ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் (91.06 மீ) பெற்றிருந்தாலும், நீரஜ் சோப்ராவின் சாதனை பெருமைக்குரியதே என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மற்றோர் இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீ தூரம் எறிந்து, எட்டாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நீரஜ் சோப்ராவுக்கு கூறிய வாழ்த்து செய்தியில்; ஈட்டி எறிதலில் அற்புதமான சாதனை. இந்தியா பெருமை கொள்கிறது நீரஜ் சோப்ரா. தோஹா டயமண்ட் லீக் 2025 தொடரில் நீரஜ் சோப்ரா 90 மீ தூரம் ஈட்டி எறிந்தற்கு வாழ்த்துகள். இந்தநிலையில், நீரஜ் சோப்ராவின் அயராத அர்ப்பணிப்பு, ஆர்வத்தின் வெளிப்பாடு இது என அதில் பதிவிட்டுள்ளார்.
The post தோகா டைமண்ட் லீக் தடகள போட்டி.. ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா: பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.