புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4302 ஆக உயர்ந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 864 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் நாடு முழுவதும் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகி விட்டனர். இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது.
ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சுனிதா சர்மா தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டம் பேரிடர் மேலாண்மைப் பிரிவு, அவசரகால மேலாண்மை பதில் பிரிவு, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் மற்றும் டெல்லியில் உள்ள ஒன்றிய அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் தற்போதைய ெகாரோனா நிலைமை மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் உள்ள மாநில மற்றும் மாவட்ட கண்காணிப்புப் பிரிவுகளில் இன்ப்ளூயன்ஸா போன்ற நோய் மற்றும் கடுமையான கடுமையான சுவாச நோய் ஆகியவற்றை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடுமையான சுவாச நோய் உள்ள நோயாளிகளுக்கு உரிய பரிசோதனை ெசய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஆக்சிஜன், தனிமைப்படுத்தும் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோக அமைப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்றும், இன்று இதுதொடர்பாக அனைத்து மருத்துவமனைகளிலும் வசதி அளவிலான தயார்நிலை மாதிரி பயிற்சிகள் ேமற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுடன் உள்ளவர்கள் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ உதவியை நாடவும் மக்களுக்கு அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இமாச்சல் மருத்துவமனைகளில் முககவசம் கட்டாயம்
நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இமாச்சல் மாநிலம் சிர்மாவூர் மாவட்டம் நாகன் கிராமத்தில் 82 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இமாச்சலில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முககவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், அவர்களுடன் வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் வேகமாக பரவுவதால்; அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா அலர்ட்: மருத்துவமனைகளில் ஆக்சிஜன், வென்டிலேட்டர் இருப்பை உறுதி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு appeared first on Dinakaran.