சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தினை ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் ஆர். பிரியா அவர்கள் இன்று (21.04.2025) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் நலனுக்காக மருந்தகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியன ரிப்பன் கட்டட வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிப் பணியாளர்கள் உணவு உட்கொள்வதற்காக உணவுக் கூடம் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள முத்தமிழறிஞர் மு. கருணாநிதி கலைஞர் மாளிகையின் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 100 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் தேவையான வண்ண நாற்காலிகள், மேசைகள் மற்றும் குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுக் கூடமானது, முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை செயல்படும். விரைவில் இதனருகில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் சிற்றுண்டி விற்பனைக் கூடம் ஒன்றும் அமையவுள்ளது.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) டாக்டர் வி. ஜெய சந்திர பானு ரெட்டி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.இராமலிங்கம், தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post பெருநகர சென்னை மாநகராட்சிப் பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தினை மேயர் பிரியா திறந்து வைத்தார். appeared first on Dinakaran.