சென்னை: முதல்வர் அறிவிப்பின்படி, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு பேருந்துகளில் 100 கி.மீ வரை கட்டணமின்றி தயாரிப்புகளை எடுத்துச் செல்ல அரசு அனுமதி வழங்கியிருப்பதுடன், அவர்களுக்கு ‘கட்டணமில்லா சுமை பயணச்சீட்டை’ ஓட்டுநர்கள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழா’வில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகளில், சுய உதவிக் குழு பெண்கள், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதை செயல்படுத்தும் விதமாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.