நம் நாடு விடுதலையடைந்து சரியாக ஐந்தரை மாதங்களிலேயே அதாவது 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். 1934-ல் இருந்து 5 முறை அவரைக் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்த நிலையில், 6-வது முறை கொலை செய்யப்பட்டார்.
டில்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் காந்தியின் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. 1949-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. காந்தி கொலை வழக்கில் நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நீதிபதி ஆத்மா சரண், மரண தண்டனை விதித்தார். விஷ்ணு கர்கரே, மதன்லால் பாஹ்வா, ஷங்கர் கிஸ்ட்யா, கோபால் கோட்சே, தத்தாத்ரேயா பர்ச்சுரே ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பைக் கேட்டதும், கோட்சே உட்பட அனைவரும் 'இந்து மதம் வாழ்க, பாகிஸ்தானை பிரிப்போம், இந்தி இந்து இந்துஸ்தான்' என்ற முழக்கங்களை எழுப்பினர்.