புதுடெல்லி: “பீகாரில் நடைபெற உள்ள பேரவை தேர்தலில் பாஜ மேட்ச் பிக்சிங் செய்ய திட்டமிட்டுள்ளது” என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பதிவில், “தேர்தலை எப்படி திருடுவது? 2024ல் மகாராஷ்டிராவில் பேரவை தேர்தல்கள் ஜனநாயகத்தை மோசடி செய்வதற்கான ஒரு திட்டம்” என்ற தலைப்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், “ஜனநாயகத்தில் முறைகேடு செய்வதற்கான வரைபடமாக மகாராஷ்டிரா பேரவை தேர்தல் அமைந்து போய் விட்டது.
தேர்தல் முறைகேடுகளை எவ்வாறு செய்வது?
1. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவை கையகப்படுத்துவது.
2. போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
3. வாக்காளர்களின் வாக்குப்பதிவை அதிகரிக்க வேண்டும்.
4. எங்கெல்லாம் பாஜ வெற்றி பெற வேண்டுமோ, அங்கெல்லாம் போலி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
5. ஆதாராங்களை மறைக்க வேண்டும்.
மகாராஷ்டிராவில் பாஜ ஏன் இவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை புரிந்து கொள்வது கடினமானது அல்ல. ஆனால் மோசடி என்பது மேட்ச் பிக்சிங் போன்றது. ஏமாற்றுபவர்கள் விளையாட்டில் வெற்றி பெறலாம். ஆனால், அது அமைப்புகளை சேதப்படுத்தும். பொதுமக்களின் நம்பிக்கையை அழிக்கும். சம்பந்தப்பட்ட அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களை பார்க்க வேண்டும். ஏனென்றால் மகாராஷ்டிரா பேரவை தேர்தலில் நடந்த மேட்ச் பிக்சிங், அடுத்து பீகார் பேரவை தேர்தலிலும் நடக்கும். அதேபோல் பாஜ தோற்கும் மாநிலங்களிலும் மேட்ச் பிக்சிங் நடக்கும். தேர்தலில் மேட்ச் பிக்சிங் என்பது ஜனநாயகத்துக்கு தரும் விஷம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
* ராகுலால் மக்களின் ஆதரவை பெற முடியாது;பாஜ
தேர்தல் மேட்ச் பிக்சிங் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜ செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நன்கு திட்டமிடப்பட்ட சதி திட்டத்தின்கீழ் ஜனநாயக நிறுவனங்களை தாக்குகிறார். காங்கிரஸ் கட்சிக்கு மக்களின் ஆதரவை பெற முடியாது, வரவுள்ள பீகார் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என்பதை உணர்ந்துள்ள ராகுல், தேர்தல் செயல்பாடுகளில் மக்களின் நம்பிக்கையை குறைமதிப்புக்குட்படுத்துகிறார்” என காட்டமாக விமர்சித்துள்ளார்.
* ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
தேர்தலில் மேட்ச் பிக்சிங் என்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும். இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தை முழுமையாக புறக்கணிப்பதை மட்டுமல்லாமல், கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளின் நேர்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். மேலும்,தேர்தலின் போது அயராது, வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையில் உள்ளது. வாக்காளர்களின் எந்தவொரு சாதகமற்ற தீர்ப்புக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் சமரசம் செய்துள்ளது என்று கூறி அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது’ என்று கூறியு ள்ளது.
* தேர்தல் ஆணையத்திற்கு ராகுல்காந்தி பதிலடி
ராகுல்காந்தி பதிவு குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. அதற்கு ராகுல் அளித்த பதில்: அன்புள்ள தேர்தல் ஆணையமே, நீங்கள் ஒரு அரசியலமைப்பு அமைப்பு. கையொப்பமிடாத, தவிர்த்து செல்லும் குறிப்புகளை வெளியிடுவது தீவிரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வழி அல்ல. உங்களிடம் மறைக்க எதுவும் இல்லையென்றால், எனது கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு பதிலளித்து அதை நிரூபிக்க வேண்டும். மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுதல் மற்றும் மகாராஷ்டிரா வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு அனைத்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிடுதல் வேண்டும். இதை தவிர்ப்பது உங்கள் நம்பகத்தன்மையைப் பாதுகாக்காது. உண்மையைச் சொல்வது பாதுகாக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.
* மகாராஷ்டிரா மக்களை அவமதித்து விட்டார்;பட்நவிஸ் தாக்கு
மகாராஷ்டிரா தேர்தல் மேட்ச் பிக்சிங் தொடர்பான ராகுல் காந்தியின் கருத்துக்கு மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் , “மகாராஷ்டிரா தேர்தல்களின் நியாயத்தன்மை பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் பீகார் பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து விட்டதை ஒப்பு கொள்வதற்கு சமம். ராகுல் காந்தி பொய்களை பேசுவதில் வல்லவர். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் மகாராஷ்டிரா வாக்காளர்களையும், ஏழை பெண்களுக்கான மாநில அரசின் திட்ட பயனாளிகளையும் ராகுல் அவமதித்து விட்டார். ராகுல் காந்தி அறியாமையில் இருந்து விழித்து கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இருண்ட எதிர்காலத்தின் அடிப்படை யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்” என இவ்வாறு தெரிவித்தார்.
* தேர்தல் தோல்விகளால் ராகுலுக்கு விரக்தி – ஜே.பி.நட்டா
தேர்தல் முறைகேடு பற்றி ராகுல் காந்தி வௌியிட்ட பட்டியலுக்கு பதிலடியாக பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பட்டியல் வௌியிட்டுள்ளார்.
அதில்,
1. காங்கிரஸ் அதன் செயல்களால் தேர்தல்களில் தோல்வி அடைகிறது.
2. தோல்விக்கு சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு பதிலாக, ராகுல் காந்தி விநோதமாக சதி திட்டங்களை உருவாக்கி கூச்சலிடுகிறார்.
3. அனைத்து உண்மைகள், தரவுகளை ராகுல் காந்தி புறக்கணிக்கிறார். 4. எந்தவொரு ஆதாரமுமின்றி தேர்தல் ஆணையத்தை குறை சொல்கிறார். 5. உண்மைகளுக்கு பதிலாக தலைப்பு செய்திகளை எதிர்பார்க்கும் ராகுல் காந்தி, பலமுறை அம்பலப்பட்டபோதிலும், வெட்கமேயின்றி பொய்களை பரப்பி வருகிறார். பீகார் பேரவை தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் ராகுல் இவ்வாறு செய்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
The post மகாராஷ்டிரா தேர்தலை போலவே பீகார் தேர்தலிலும் மேட்ச் பிக்சிங் செய்ய பாஜ சதி: ராகுல்காந்தி கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.