மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை ஏர் இந்தியா விமானம் 322 பயணிகள் மற்றும் 19 ஊழியர்களுடன் நியூயார்க் சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது பயணி ஒருவர் கழிப்பறை சென்றிருந்தார். அப்போது அங்கு கிடந்த ஒரு பேப்பரில் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து உடனே அந்த பயணி விமான ஊழியரிடம் தெரிவித்தார். பின்னர் விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்.
அவர்கள் அறிவுறுத்தலின்படி விமானம் மீண்டும் காலை 10.25 மணியளவில் அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்தனர். ஆனால் வெடி பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானத்தில் செல்ல இருந்த பயணிகளுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விமானம் இன்று காலை 5 மணிக்கு மீண்டும் நியூயார்க் புறப்பட்டு செல்லும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.