புதுடெல்லி: பிரதமர் மோடி தனது உரையில் மேக் இன் இந்தியா பற்றி குறிப்பிடவில்லை. அந்த திட்டம் தோல்வியடைந்து விட்டது என்பதை அவர் ஒப்புகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறினார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,பிரதமரே, நாடாளுமன்றத்தில் உங்கள் உரையில், ‘மேக் இன் இந்தியா’ என்று நீங்கள் குறிப்பிடவே இல்லை.மேக் இன் இந்தியா என்பது ஒரு நல்ல முயற்சி என்றாலும், அது தோல்வி என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். 2014 ல் 15.3 சதவீதத்திலிருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 12.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவாகும்.
இந்திய இளைஞர்களுக்கு வேலைகள் தேவை. சமீபத்திய காலங்களில் எந்த அரசும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியோ இந்த தேசிய சவாலை சிறப்பான அளவில் சந்திக்க முடியவில்லை. நமது உற்பத்தித் துறையை பின்னுக்குத் தள்ளி வைத்திருப்பதை நிவர்த்தி செய்வதற்கும், எதிர்கால உலகப் பொருளாதாரத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க அதை தயார்படுத்துவதற்கும் ஒரு தொலைநோக்கு பார்வை தேவை. இந்தியாவில் உற்பத்திக்கான இந்த தொலைநோக்கு பார்வை மின்சார மோட்டார்கள், பேட்டரிகள், ஒளியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
உற்பத்தித் துறையை மீட்டெடுப்பதற்கும், அதிநவீன உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கும், நமக்குத் தேவையான வேலைகளை உருவாக்குவதற்கும் இதுவே ஒரே வழி.சீனா நம்மை விட 10 ஆண்டுகள் முன்னால் உள்ளது. வலுவான தொழில்துறையை கொண்டுள்ளது. அவற்றுடன் திறம்பட போட்டியிடுவதற்கான ஒரே வழி நமது உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதுதான். அதற்கு தொலைநோக்கு மற்றும் உத்திகள் தேவை என குறிப்பிட்டுள்ளார்.
The post மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி என ஒப்புக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.