புதுடெல்லி: யமுனை நதி நீர் விவகாரம் குறித்து கெஜ்ரிவாலின் கருத்துக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்க ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை நதியில் அரியாணா மாநிலம் (பாஜக அரசு) விஷத்தை வெளியேற்றுவதாகவும், அமோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாகவும் டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம்ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். டெல்லியில் இனப்படுகொலை செய்ய பாஜக அரசு யமுனை நீரில் விஷத்தை கலந்ததாக அவர் கூறினார்.
கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியது. அதேநேரம் பிரதமர் மோடி, அரியானா முதல்வர் நைப் சிங் சைனி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், விஷம் கலப்பதாகப் பொய் கருத்து தெரிவித்து டெல்லி மற்றும் அரியானா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கெஜ்ரிவால் மீது அரியானா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிக்க இன்று கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், டெல்லி முதல்வர் அடிசி உள்ளிட்டோர் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆஜராகினர்.
தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு, கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் ஆணையம் ஏற்கனவே எங்கள் நடவடிக்கையை முடிவு செய்துவிட்டதைக் குறிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தனது குரலை உயர்த்தியதற்காகத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. டெல்லி தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி குறித்து அவதூறு பரப்ப அதிக அமோனியா கலந்த விஷ குடிநீரை மக்களுக்கு வழங்குகின்றனர். இதுவும் ஒரு அரசியல் சதி தான். எங்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கும், ஜனவரி 26 முதல் 27 முதல் யமுனையில் 7 பிபிஎம் ஆக இருந்த அமோனியா அளவு இப்போது 2 ஆகக் குறைந்ததற்கும் டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்று கூறினார்.
The post யமுனை நதி நீரில் விஷம் கலப்பு விவகாரம்; தேர்தல் ஆணையம் முன் ஆஜரான 2 முதல்வர்கள், ஒரு மாஜி முதல்வர்: டெல்லியில் பரபரப்பு appeared first on Dinakaran.