திருவனந்தபுரம்: திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர திருவனந்தபுரம்-மங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொச்சி கடவந்திராவில் செயல்பட்டு வரும் பிருந்தாவன் ஃபுட் ப்ராடக்ட்ஸ் என்ற ஒரு நிறுவனம் உணவுப் பொருட்களை விநியோகித்து வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான மற்றும் கெட்டுப்போன ஏராளமான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அந்த நிறுவனத்திற்கு உணவு தயாரிப்பதற்கு முறையான லைசன்ஸ் இல்லை என்றும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த உணவு நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்திற்கு ரயில்வே ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
The post வந்தே பாரத் ரயில்களில் கெட்டுப்போன உணவு விநியோகம்: லைசென்ஸ் இல்லாமல் செயல்பட்ட உணவு நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.