
தலைநர் டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்தச் சதிச் செயலுக்குக் காரண மானவர்கள் நீதியின் முன்னே நிறுத்தப்படுவார்கள் எனப் பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார். தீவிரவாதம் எந்த வடிவத்திலும் தலையெடுக்காதபடி அரசு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.
நவம்பர் 10 மாலை, டெல்லி செங்கோட்டை அருகே சென்றுகொண்டிருந்த ஒரு கார், போக்குவரத்து சிக்னல் அருகே வெடித்துச் சிதறியதில், அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். டெல்லியில், கடந்த 14 ஆண்டுகளில் இப்படியான தாக்குதல் நடைபெற்றதில்லை. 2011இல், டெல்லி உயர் நீதிமன்றம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டதால் அசம்பாவிதங்கள் குறைந்தன.

