புதுடெல்லி: பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 600 டன் மிதக்கும் கழிவுகளைச் சேகரித்து பதப்படுத்தப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் 62 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திருவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுதொடர்பாக உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக 2.5 கிலோமீட்டர் நீளமுள்ள பகுதியில் தூர்வாரும் பகுதிகள் மேற்கொள்ளப்பட்டன.
கங்கையின் மூன்று தனித்தனி நீரோடைகளை ஒரே நீரோட்டமாக இணைத்து மிதக்கும் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன. 20 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் 83 உயர் திறன் தூர்வாரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக 22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆறு லட்சம் கன மீட்டருக்கு, மணல் மற்றும் வண்டல் மண் அகற்றப்பட்டது. 1,000 டென்னிஸ் மைதானங்களுக்குச் சமமான நிலத்தை மீட்டெடுக்கப்பட்டது. தினமும் சராசரியாக 10 முதல் 15 டன் மிதக்கும் கழிவுகளைச் சேகரித்தோம்.
மொத்தமாக 600 டன் அளவிற்கு மிதக்கும் கழிவுகள் வெளியேற்றப்பட்டன. இதன் மூலம் கங்கையின் நீரோட்டம் சுகாதாரமானதாக இருந்தது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் பதப்படுத்தப்பட்டன. கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்பட்டன. நாடு முழுவதும் நீர்நிலை மேலாண்மைக்கான முன் உதாரணமாக கும்பமேளா விளங்கியது. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், பெரிய அளவிலான மக்கள் கூட்டங்களை கட்டுப்படுத்த தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருந்தது. இந்தாண்டு நடத்தப்பட்ட மகா கும்பமேளா வரலாற்று நிகழ்வாக அமைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மகா கும்பமேளாவில் 600 டன் மிதக்கும் கழிவு சேகரிப்பு: உத்தரபிரதேச அரசு தகவல் appeared first on Dinakaran.