
மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டங்களை நடத்துவது ஜனநாயக நாட்டில் ஒன்றும் புதிதல்ல. ஆனால், ‘மூச்சு முட்டுது; கொஞ்சம் சுத்தமான காற்று கிடைக்குமா..?’ என ஆட்சியாளர்கள் கவனம் ஈர்க்க ஒரு பெருங்கூட்டம் தலைநகரில் கூடியது வேதனையான காட்சி. அதுமட்டுமல்ல, டெல்லி ‘இந்தியா கேட்’ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம், காற்று மாசுபாட்டால் தலைநகர் எப்படித் திணறிக் கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சி.
டெல்லியில் காற்று மாசு, அதுவும் குளிர்காலத்தில் நிலவும் காற்று மாசுபாடு சமீப காலமாக முக்கிய பேசுபொருளாகத்தான் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் வரை கொட்டிக் கிடக்கும் வழக்குகள், உள்ளூர் தொடங்கி உலக ஊடகங்கள் வரையிலான் விவாதங்கள் என எல்லாம் பழைய கதையாகிவிட, மக்களின் விநோதப் போராட்டம் அந்தப் பிரச்சினையின் ஆழத்தின் சாட்சி! கூடவே, அடுத்தடுத்த அமைந்த ஆட்சிகளும், மத்திய அரசும் தோற்றுவிட்டன என்பதையும் அப்பட்டமாக தோலுரித்துள்ளது என்கின்றனர் சூழலியர் செயற்பாட்டாளர்கள்.

