சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இரவில் விடுதிக்கு சென்ற பெண் பயிற்சி மருத்துவரிடம் அத்துமீறிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து 2-வது நாளாக, பயிற்சி மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 24-ம் தேதி இரவு பணி முடிந்து பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், அந்த வளாகத்தில் உள்ள விடுதிக்கு நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த இளைஞர், பயிற்சி பெண் மருத்துவர் முகத்தை துணியால் மூடி தாக்கினார். அந்தசமயத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் பணியாளர் ஒருவரின் கணவர் வந்ததை அடுத்து, அவர் தப்பியோடினார். இதுகுறித்து கல்லூரி டீன் சத்தியபாமா அளித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்கு பதிந்தனர்.