புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது போல் இந்தியா வரியை குறைத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ், சொந்த நாட்டில் சிங்கம் போல் கர்ஜிக்கும் பிரதமர் மோடி அமெரிக்காவை பார்த்து ஏன் பயப்படுகிறார் என்றும் கேட்டுள்ளது. அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது வரியை குறைத்துக் கொள்ள இந்தியா ஒப்புக் கொண்டிருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இது குறித்து, காங்கிரசின் ஊடக மற்றும் விளம்பரத் துறைத் தலைவர் பவன் கேரா அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரிகளை குறைக்க இந்தியா ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிக்கிறார். ஆனால் இது குறித்து ஒன்றிய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடாதது ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் மூலம் இந்தியர்கள் தங்கள் சொந்த அரசின் வர்த்தகக் கொள்கையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டிரம்பின் அழுத்தத்தால் இந்திய அரசு வரிகளைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதா?
நீங்கள் ஏன் இந்தியாவின் தேசிய மற்றும் மூலோபாய நலன்களை விட்டுக்கொடுத்தீர்கள்? வரி குறைப்பு பற்றி டிரம்ப் அறிவிக்கும் போது அமைச்சர் பியூஸ் கோயல் அமெரிக்காவில் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இப்படி வரிகளை குறைப்பதற்கு பதிலாக, பரஸ்பர வரிகளைச் சந்திப்பது சிறந்ததல்லவா? இந்த முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன்பு நீங்கள் யாருடன் ஆலோசித்தீர்கள்? ஒன்றிய அமைச்சரவையிலா? நாடாளுமன்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிலா? அரசியல் கட்சிகளிடமா? மெக்சிகோ கனடா போல மோடி ஏன் டிரம்பிடம் தொலைபேசியில் பேசவில்லை?
பிரதமர் மோடி சொந்த நாட்டில் சிங்கம் போல கர்ஜிக்கிறார், ஆனால் வெளியே செல்லும்போது, களிமண் சிங்கமாக மாறுகிறார். அடுத்தவர்களிடம் சரமடைகிறார். களிமண் சிங்கத்தால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க அனுமதிக்க முடியாது. யாரோ ஒருவர் இந்தியாவை அச்சுறுத்தி, தனது கோரிக்கைகளுக்கு ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தியது போல் தெரிகிறது, இது மிகவும் வேதனையானது.
அமெரிக்காவில் பிரதமர் மோடியின் முன்னிலையில், பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் இந்தியா அச்சுறுத்தப்பட்டது, ஆனால் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர் சிரித்துக் கொண்டிருந்தார். நமது பிரதமரின் முன்னிலையில் இந்தியா அவமதிக்கப்படுகிறது, அவர் இன்னும் அமைதியாக இருப்பதும் சிரித்துக் கொண்டிருப்பதும் எங்களுக்கு வேதனை அளிக்கிறது. ஏற்கனவே மோடி அரசின் வர்த்தகக் கொள்கை பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்போது, வரி குறைப்பு உண்மையாக இருந்தால், இந்த சரணடைதலால் நமது வர்த்தகம் மேலும் நசுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் எக்ஸ் பதிவில், ‘‘பிரதமர் மோடி அழுத்தத்திற்கு ஆளாகி அமெரிக்காவை திருப்திப்படுத்த வரிகளை குறைத்துள்ளார். கனடா, மெக்சிகோ மற்றும் நேபாளம் கூட அமெரிக்காவைப் பார்த்து பயப்படாதபோது, மோடி எதற்கு பயப்படுகிறார் என்பதுதான் கேள்வி’’ என கூறி உள்ளார்.
The post சொந்த நாட்டில் சிங்கமாக கர்ஜிக்கிறீர்கள் அமெரிக்காவை பார்த்து பயப்படுவது ஏன்? பிரதமர் மோடிக்கு காங். கேள்வி appeared first on Dinakaran.