ராஜாஜியின் மீது சிலர் தனிப்பட்ட முறையில் குறைகள் கூறினாலும், அரசை, அமைச்சரவையை நிர்வாகம் செய்வதில், வழிநடத்துவதில் கைதேர்ந்தவர் ராஜாஜி என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஒரு பிரச்சினையோ, கோப்புகளோ தன்னுடைய பார்வைக்கு வரும்போது, அதனுடைய முழு விவரங்கள், அதன் தன்மை, அதன் மூலம் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதை ஆராய வேண்டும்.
மேலும் சட்டங்கள், நடைமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் அதன் நியாயத் தன்மையை சீர்தூக்கிப் பார்த்து அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ராஜாஜி. தன்னுடைய அமைச்சரவை சகாக்களும் அதையே பின்பற்ற வேண்டும் என விரும்பினார்.