நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக சேலம் சிறப்பு உருக்காலை அமைப்பது குறித்து காமராஜர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் பேசப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் இரும்புத் தாது குறித்து மன்னர் ஆட்சிக் காலம் தொட்டே பேசப்பட்டு வந்தது. அந்த வகையில், திப்பு சுல்தான் காலத்தில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்கு சேலம் மாவட்டத்தில் இருந்துதான் இரும்புத் தாது எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
சேலம் உருக்காலை அமைக்க சென்னை மாகாண அரசு விரும்பியபோதிலும், அதற்கான நிலக்கரி போன்ற எரிபொருள் இங்கு கிடைக்கவில்லை. பிஹார், மேற்கு வங்கம் போன்ற தொலைவான இடங்களில்இருந்துதான் நிலக்கரியை கொண்டுவரவேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது. சேலம் இரும்புத் தாது மிகவும் தரம் வாய்ந்தது. இதனால் பிற்காலத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தட்டுகள், நாணயங்கள் தயாரிப்பிற்கும் சேலத்தில் இருந்து கிடைக்கும் இரும்பு பயன்படுத்தப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.