சொத்து வரி உயர்வு குறித்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதுகுறித்து விளக்கம் அளித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துறைகள் ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பேசியதாவது:

”சொத்து வரி உயர்வை அரசு மனமுவந்து செய்யவில்லை. நான் அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன.

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில்கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதை சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்.

ஆகவே, இந்த நிலையிலேதான் மக்களை பாதிக்காமல், குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தக்கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் இதிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளைப் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை. ஆகவேதான், பத்திரிகைகளும், ஊடகங்களும்கூட இந்த அரசினுடைய முயற்சியைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

“அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கூடிய கட்டாயம்-அதற்கு நிதி ஆதாரம் அவசியம் தேவை” என்றும், “இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்” என்றும் நேற்றைய தினம் ஒரு நாளிதழின் தலையங்கத்திலேயே இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

பேரவையில் அமர்ந்திருக்கக்கூடிய உறுப்பினர்கள் அனைவரையும், இந்த அரசின் சார்பிலே பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது, அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்பதுதான்.

எதிர்க் கட்சி மற்றும் எங்கள் தோழமைக் கட்சிகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்! மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் மட்டுமின்றி, இங்கு அமர்ந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளின் சட்டமன்றத் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்’’.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *