அரசியல், உலகம்

நம்பிக்கை ஓட்டெடுப்பில் இம்ரான் தோல்வி: பாக்., பார்லி.,யில் விடிய விடிய பரபரப்பு

இதில் இம்ரான் கான் அரசு தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.விடிய விடிய ஏற்பட்ட அதிரடியான அரசியல் திருப்பங்களால் நேற்று இரவு முழுதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 3ம் தேதி, பார்லிமென்டில் இதன் மீது ஓட்டெடுப்பு நடப்பதாக இருந்தது.கூட்டணி கட்சிகள் மற்றும் சொந்தக் கட்சி எம்.பி.,க்கள் சிலர் இம்ரான் கானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். அதனால் பார்லிமென்டில் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார்.தீர்ப்புஇந்நிலையில், நம்பிக்கைஇல்லா தீர்மானத்தை நிராகரித்து, அந்த நாட்டுபார்லிமென்டின் துணை சபாநாயகர் காசிம் கான் சுரி உத்தரவிட்டார்.

இதையடுத்து பிரதமரின் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி பார்லிமென்டை முடக்கி உத்தரவிட்டார்.இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரித்த அந்நாட்டின் உச்ச நீதிமன்றம், ‘துணை சபாநாயகர் மற்றும்அதிபரின் உத்தரவுகள் செல்லாது’ என, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.மேலும் ‘பார்லிமென்டில்நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, 9ம் தேதி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்’ என, தீர்ப்பில் கூறப்பட்டது.

அதன்படி, பார்லிமென்ட், இந்திய நேரப்படி நேற்று காலை 11:00 மணிக்கு மீண்டும் கூடியது. ”அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதி குறித்து விவாதிக்க வேண்டும்,” என, சபாநாயகர் ஆசாத் காசிர்குறிப்பிட்டார். இதற்குஎதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்தன.’உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்’ என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அதையடுத்து மதியம் 1:00 மணி வரை பார்லிமென்டை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.

சீராய்வு மனு

ஆனால், குறிப்பிட்டபடி மதியம் மீண்டும் பார்லிமென்ட் கூடவில்லை.நான்கு மணி நேரத்துக்குபின் பார்லிமென்ட் மீண்டும் கூடி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பின் ரம்ஜான் நோன்பு திறப்புக்காக பார்லிமென்ட் ஒத்திவைக்கப்பட்டது.இதற்கிடையே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, அரசு தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், முறையாக விண்ணப்பிக்கப்படவில்லை.

அதனால், சீராய்வு மனு நாளை தாக்கல் செய்யப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.நேற்று இரவு பார்லிமென்ட் மீண்டும் கூடியது. உடனடியாக ஓட்டெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், ஆளும் தரப்பு அதை ஏற்கவில்லை. இதனால் கடும் அமளி ஏற்பட்டது. அதையடுத்து, இரவு 10:00 மணி வரை பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டது.பார்லிமென்டில் இவ்வளவு அமளி, துமளி நடந்தபோதும், இம்ரான் கான் பார்லிமென்டுக்கு வரவில்லை. அரசு தரப்பில் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமுத் குரேஷியே சபைக்கு வந்திருந்தார்.

கண்காணிப்பு

இதற்கிடையே அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்தார். இவ்வாறு தொடர்ந்து ஓட்டெடுப்பை நடத்தாமல்இருப்பதற்கான அனைத்து முயற்சிகளும் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.அதே நேரத்தில் ‘ஓட்டெடுப்பை நடத்தாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்’என, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்தன.பரபரப்பான இந்த அரசியல் காட்சிகளுக்கு இடையே, தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட முக்கிய நகரங்களில் ராணுவம் குவிக்கப்பட்டது.அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடு செல்லாமல்இருப்பதை தடுக்க, விமான நிலையங்களில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இரவிலும் உச்ச நீதிமன்றம் செயல்படுவதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த பரபரப்பான திருப்பங்களுக்கு இடையே சபாநாயகரும், துணை சபாநாயகரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். முன்னதாக இருவரும், பிரதமர் இம்ரான் கானை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.

இதன்பின் நள்ளிரவில் மீண்டும் பார்லி., நடவடிக்கைகள் துவங்கின.பாக்., முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் அயாஸ்சாதிக், சபாநாயகராக இருந்து, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தினார். இதற்கிடையே, பிரதமர்இம்ரான் கான் மற்றும் அவரது கட்சியினர் பார்லி.,யில் இருந்து வெளியேறினர்.இம்ரானுக்கு எதிரானநம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாகவும், இம்ரான் அரசு தோல்வி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *