தமிழ்நாடு, வர்த்தகம்

பருத்தி நூல் விலை உயர்வு: மத்திய மந்திரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு

பருத்தி நூல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால் தமிழ்நாட்டில் ஜவுளித்தொழிலும், அதை நம்பியுள்ள நெசவாளர்களும், தொழிலாளர்களும் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதை விரிவாக சுட்டிக்காட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் “பருத்தி நூல் விலை உயர்வை உடனடியாக தடுத்திடவும், நெசவாளர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை விரைவில் களைந்திடவும்” 3 மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மிக முக்கியமாக, தொழில்துறையிலும், நெசவாளர்கள் மத்தியிலும் அதிகரித்து வரும் அதிருப்தி கவலை அளிப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

மத்திய மந்திரிகளுடன் இன்று சந்திப்பு

இந்த நிலையில், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் நெசவாளர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு அவர்களை தொடர் போராட்டத்திற்கு வித்திட்டுள்ளது. பொருளாதார இழப்புகளை சந்திக்கும் ஜவுளித்தொழிலில் ஒரு அசாதாரணமான சூழல் உருவாகியிருக்கிறது. ஆகவே, இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, தி.மு.க. நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்கள் இணைந்து டெல்லி சென்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும், ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலையும் இன்று (புதன்கிழமை) நேரில் சந்தித்து நெசவாளர்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வுகாண வேண்டும் என்று நேரில் வலியுறுத்துமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

நெசவாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், அவர்களின் இன்னல்களை நீக்கவும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, மத்திய அரசினையும் தொடர்ந்து வலியுறுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *