நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயற்சிகள் மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

நன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் இழப்பு. இதைவிட பெரிய இழப்பு எதுவும் இருக்க முடியாது.

நான் அளித்த வாக்குறுதிப்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற என்னால் முயன்ற அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். உச்ச நீதிமன்றத்தின் முடிவால் தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாததாகி விட்டது.

உச்ச நீதிமன்றம் கேள்வி

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. தமிழகத்துக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்ற உண்மை நிலையை மத்திய அரசு கூறியதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது.

அரசியல் செய்ய வேண்டாம்

நீட் தேர்வு தொடர்பாக மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக அமைச்சர்களுடன் பலமுறை பேச்சு நடத்தி முயற்சிகள் மேற்கொண்டேன். நானும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பிரதமர் மோடியை சந்தித்தோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயன்றேன். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது.

இது தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட நான் விரும்பவில்லை. மாணவி தற்கொலைக்கு யார் மீது யார் பழிபோடலாம் என அரசியல் செய்ய வேண்டாம். இது தொடர்பாக மேலும் பேச விரும்பவில்லை.

பாதுகாப்பு துறை அமைச்சர் பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

By ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *